புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,334 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கவுள்ளதால் தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது; 2019 - 20ஆம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிர் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வாங்கிட நகரப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. வயது 18 முதல் 40 வயது வரை. ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். இத்திட்டத்தில் 50 சதவிகித மானியமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டும். மகளிர் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியம் ரூ.31,250 வழங்கப்படும். அந்தந்தப் பகுதி நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலங்களில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.