பொன்னமராவதி அருகே உடல் நலக்குறைவால் உயிரிழந்த கோயில் காளைக்கு ஊர்ப்பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் பொன்னழகி அம்மன் கலிங்கி கருப்பர் கோயிலில் கோயில் காளையானது கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று தனது வீர, தீரத்தைக் காட்டி வந்த இக்காளை கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாகி வந்தது. கால்நடை மருத்துவர் மூலம் உரிய சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை அக்காளை உயிரிழந்தது.
இதையடுத்து ஊர்ப் பொதுமக்கள் காளைக்கு பட்டு மற்றும் மாலை சாத்தி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று பொன்னழகி அம்மன் கோயில் அருகே அடக்கம் செய்தனர்.