புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நடைப்பயிற்சி சென்றபோது, டிராக்டர் மோதியதில் நகைக்கடை உரிமையாளர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி கலைஞர் சாலையைச் சேர்ந்தவர் ஆர்.பழனிவேல்(65). இவர், ஆலங்குடியில் நகைக்கடை, கடலை ஆலை உள்ளிட்ட தொழில் செய்துவந்தார்.
இவர், வழக்கம்போல், சனிக்கிழமை அதிகாலை ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அப்போது, அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சென்ற டிராக்டர் பழனிவேல் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து, ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து டிராக்டர் ஓட்டுநர் கல்லாலங்குடியைச் சேர்ந்த எம்.ஜெயச்சந்திரனைக்(35) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.