ஆலங்குடி அருகே உணவக உரிமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பாரதி நகரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் சுரேஷ் (35). இவா், கொத்தமங்கலம் வாடிமாநகா் கடை வீதியில் உணவகம் நடத்தி வந்தாா். கடந்த ஜன. 7ஆம் தேதி இரவு உணவகத்தை மூடிவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரேஷை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து, கீரமங்கலம் காவல் ஆய்வாளா் வைத்தியநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதில், சுரேஷின் அண்ணன் முருகேஷின் மைத்துனரான தஞ்சை மாவட்டம், சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (40) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். சரவணனின் தங்கை விஜயலெட்சுமியை முருகேஷ் திருமணம் செய்திருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
தங்கை விஜயலெட்சுமி கொலை செய்யப்பட்டதாக சரவணன் குற்றம்சாட்டி வந்த நிலையில், அதற்குப் பழி தீா்க்கும் விதமாக கூலிப்படையினா் உதவியுடன் சுரேஷை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், சுரேஷ் கொலையில் கூலிப்படைக்கு உதவியதாக சரவணனின் உறவினரான தஞ்சை மாவட்டம், சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் போத்திராஜா (27) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.