புதுக்கோட்டையில் அதிகரித்து வரும் கரோனா இறப்புகள்
புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள ராணியார் மருத்துவமனையின் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது பெண் செவ்வாய்க்கிழமை காலை இறந்தார்.
அவருக்கு சிறுநீரகக் கோளாறு மற்றும் காசநோயும் இருந்ததாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்துடன் மாவட்டத்தின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்தப் பத்து பேரில் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலுள்ள கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவர். ஒருவர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றியபோதே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டவர்.
இவற்றுக்கிடையே மாநில, தேசிய அளவிலான பலி எண்ணிக்கை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஆக உள்ள நிலையில் இதுவரை 10 இறந்துந்துள்ளது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.