புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு அனைத்து கடைகளையும் மூடுவதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆலங்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. மேலும், ஆலங்குடி வட்டத்தில், கீரமங்கலம், நகரம், எல்.என்.புரம், வல்லத்திராகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியர் கலைமணியை சந்தித்து, வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், கரோனா பரவலை தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை ஆலங்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவது.
மேலும், ஜூலை 22-ம் தேதி முதல் ஜூலை 25 வரை மதியம் 2 மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட முடிவு செய்துள்ளதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.