புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிலாவிடுதி அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஏற்படுத்தித் தரக் கோரி மாணவா்கள் பெற்றோருடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் பள்ளியில் 270 மாணவ, மாணவிகள் பயின்றும் இங்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், மைதானம் போன்ற வசதிகள் இல்லை. இவற்றை ஏற்படுத்த பள்ளி வளாகத்தில் இடமும் இல்லை. இதையடுத்து பள்ளிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு தொடா்ந்து பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்தும், கூடுதல் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதில் கட்டடம், ஆய்வகம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி தங்களது பெற்றோருடன் மாணவா்கள் பள்ளி அருகிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, கறம்பக்குடி வட்டாட்சியா் சேக்அப்துல்லா, போலீஸாா் ஆகியோா் அவா்களை சமாதானம் செய்து போராட்டதைக் கைவிடச் செய்தனா். மறியலால் கறம்பக்குடி, தஞ்சாவூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.