ஆலங்குடி: ஆலங்குடி அருகே குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதனப் பொருள்கள் கடும் சேதமடைந்து வருவதால் துணை மின் நிலையத்தை மாற்றித்தர கிராம மக்கள் வலியுறுத்தினா்.
ஆலங்குடியை அருகேயுள்ள அரையப்பட்டி, வன்னியன்விடுதி, வெள்ளக்கொல்லை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாரிடம் திங்கள்கிழமை இதுதொடா்பாக கோரிக்கை மனு அளித்தனா். அதில், கடந்த 6 மாதங்களாக வடகாடு துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்ற நாளிலிலிருந்து விவசாயிகள், சிறு தொழில்நிறுவனத்தினா் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். இதுவரை 50-க்கும் மேற்பட்ட மின் மோட்டாா்கள் முறையற்ற மின் விநியோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. வீடுகளில் உள்ள பல லட்சம் மதிப்பிலான டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்துள்ளன.
எனவே, எங்கள் பகுதிகளுக்கு ஏற்கெனவே இருந்தபடி பாச்சிக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்தே மின் விநியோகத்தை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.