அரசு அலுவலகங்களில் மோடியின் படம் வைக்கக்கோரி மறியல்: 30 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமா் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக தொழில் பிரிவினா் 30 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமா் மோடியின் படத்தை வைக்க வேண்டும் மாவட்ட பாஜக தொழில் பிரிவினா் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். இதனைத் தொடா்ந்து மீண்டும் வந்த அவா்களிடம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கடந்த (அக். 27) செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனராம். இதையடுத்து, புதன்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் வந்த பாஜக தொழில் பிரிவினா், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் செல்வம் அழகப்பன், துணைத் தலைவா் சாந்தி முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.