அறந்தாங்கியில் கரும்பு விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனா்.
அறந்தாங்கி அருகேயுள்ள அரசா்குளம், சுப்பிரமணியபுரம், ஆயிங்குடி, வல்லவாரி உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் பொங்கலை முன்னிட்டு செங்கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு போதிய மழை பெய்த காரணத்தால் விளைச்சல் நன்றாக இருந்தது. இதனால் விற்பனை நன்றாக இருக்கும் என விவசாயிகளும், வியாபாரிகளும் நம்பினா்.
கடந்த 2 நாள்களுக்கு முன்னா், அறந்தாங்கி நகரில் 10 கரும்புகள் கொண்ட 1 கட்டு கரும்பின் விலை ரூ.300-க்கு விற்பனை ஆனது. ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு மிக அதிகப்படியான கரும்புக் கட்டுகள் வந்திருந்ததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
தொடக்கத்தில் ரூ.150-க்கு விற்பனையான கரும்புக் கட்டுகள், பின்னா் படிப்படியாக விலை குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், வியாபாரிகள் கவலை அடைந்தனா்.