அறந்தாங்கி தாலுகா அலுவலக சாலையில் உள்ள அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தடையை மீறி கட்டடம் கட்டியதால் அறநிலையத்துறையினர் கட்டடத்துக்கு செவ்வாய்கிழமை சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா அலுவக சாலையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 550 சதுர அடி அளவிலான இடத்தில் அரசு உத்தரவை மீறி தனிநபர் கட்டடம் கட்டியதால் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்ததால் அத்துமீறி கட்டிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி பாலசுப்ரமணியன் கூறுகையில், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் சொந்தமான இடத்தில் சுப்புலெட்சுமி என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார். தற்போது அதனை ஆக்கிரமிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் கட்டடம் எழுப்பியதால் திருச்சி இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பிரிவின் கீழ் கட்டப்பட்ட கட்டடத்திற்கு பூட்டி சீல் வைத்துள்ளோம்.
மேலும் வாடகைதாரர் சரியான உரிமம் பெற்று கட்டடத்தை
கட்டவில்லை. எனவே இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார். அறந்தாங்கி முக்கிய கடை வீதி பகுதியில் காவல்துணை கண்காணிப்பாளர் பி. பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இச்சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அறந்தாங்கி வட்டாட்சியர் சிவக்குமார். நகராட்சி ஆணையர் த.பாஸ்கரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.