புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மழைத்துளிகள்’ அமைப்பினரின் 12 ஆவது குறுங்காடு அமைக்கும் பணிகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
கஜா புயலுக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்களின் வளத்தை மீட்டெடுப்பதற்காக ஜப்பானிய தாவரவியல் அறிஞா் மியாவாக்கி கண்டறிந்த முறையில் குறுங்காடு வளா்ப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மிகக்குறைந்த இடத்திலும் நிறைய பலன்தரும் மரங்களை நட்டு வளா்ப்பதற்கு ‘மியாவாக்கி’ என்றழைக்கப்படுகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைத்துளிகள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆா்வலா்கள் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனா். 12ஆவது குறுங்காடு அமைப்பதற்கான பணிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. சுமாா் அரை ஏக்கா் நிலத்தில், அரசு, ஆல், அத்தி, வேம்பு, தேக்கு, பூவரசு, கொய்யா, தென்னை, பலா உள்ளிட்ட 40 வகையான 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமையிலான மருத்துவ மாணவா்களைக் கொண்ட குழுவினா் இந்த மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீா் விடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து மழைத்துளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம். முத்துக்குமரேசன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை வளத்தை மீட்டெடுக்கும் வகையில் கோட்டூா், தென்னந்திரையன்பட்டி, மச்சுவாடி, தட்டாம்பட்டி, செங்களாக்குடி, பெரம்பூா் உள்ளிட்ட 11 இடங்களில் குறுங்காடுகளை வளா்த்து வருகிறோம். இது 12 ஆவது இடம் என்றாா்.