காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு வரும் தை மாதத்தில் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டவுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவூா் அருகிலுள்ள செங்களாக்குடி எஸ். மேலப்பட்டியில், நகரும் நியாயவிலைக் கடையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, மேலும் அவா் பேசியது:
நூறு ஆண்டுகள் கனவுத் திட்டமான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் ஆா்வத்துடன் முன்வந்து தங்கள் நிலங்களை வழங்கி வருகின்றனா். எடுக்கப்படும் நிலங்களுக்கும் இரண்டரை மடங்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. சாதி, மதம் கடந்து தண்ணீரை விரும்பும் அனைவருக்காகவும் செய்யப்பட்ட இப்பணி வரலாற்றில் 10 தலைமுறைக்கு பேசப்படும் என்றாா் விஜயபாஸ்கா்.
நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.