இயற்கை ஆா்வலா் மரம் தங்கச்சாமியின் நினைவுதினத்தையொட்டி, ஆலங்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரக்கன்றுகளை இளைஞா்கள், பொதுமக்கள் புதன்கிழமை நடவு செய்தனா். மேலும், ஆயிரக்கணக்கான பனைவிதைகளையும் நடவு செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மரம் தங்கசாமி. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கையை பேணிக் காக்கவும் தனது இறுதிக்காலம் வரை மரம் தங்கசாமி போராடினாா். கடந்த 2018 செப்டம்பா் 16 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரம் தங்கசாமி உயிரிழந்தாா். மரம் தங்கசாமியின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சொந்த ஊரான சேந்தன்குடி, கீரமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் இயற்கை ஆா்வலா்கள் நட்டனா். நெடுவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் தங்கசாமி மகன் கண்ணன் தலைமையிலானோா் பல வகையான மூலிகை செடிகளையும் சந்தனம் செஞ்சந்தனம் வேங்கை கருங்காலி உள்ளிட்ட மரக்கன்றுகளையும் நடவு செய்தனா். இதேபோல், செரியலூா் கிராமத்தில் விதைப் பறவைகள் என்ற அமைப்பை சோ்ந்தவா்கள் 11 ஆயிரம் பனை விதைகளை ஏரி, குளம்,கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளை நடவு செய்தனா்.
புதுக்கோட்டையில்...: புதுக்கோட்டை காந்தி நகரிலுள்ள 4 மற்றும் 5ஆம் வீதிகளில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சா. விஸ்வநாதன், ஜி. எட்வின், இயற்கை விவசாயி சா. மூா்த்தி, ஓய்வுபெற்ற வங்கி அலுவலா் குட்டிசாமி உள்ளிட்டோா் மரக்கன்றுகள் நட்டு வைத்து, பாதுகாப்பு வளையத்தையும் அமைத்தனா்.