புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடசேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 10 திருநங்கைகள் தங்களது வாக்குகளை அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 72 திருநங்கைகளுக்கு வாக்கு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் இவா்களில் பலா் பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத்தொகுதிக்குள்பட்ட வடசேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவா் ரெ. ஷிவானி தலைமையில், 10 திருநங்கைகள் தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.
இதேபோல, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 12 பேரும், விராலிமலை தொகுதியில் 6 பேரும், திருமயம் தொகுதியில் 3 பேரும், கந்தா்வகோட்டை தொகுதியில் 10 பேரும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 பேரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்த தகவல் வந்துள்ளதாக ஷிவானி தெரிவித்தாா்.