மாணவியிடம் தகாத பேச்சு: கடும் நிபந்தனைகளுடன் ஆசிரியருக்கு பிணை

புதுக்கோட்டை தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் கைப்பேசியில் தகாத வகையில் பேசி கைது செய்யப்பட்ட

புதுக்கோட்டை தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் கைப்பேசியில் தகாத வகையில் பேசி கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு, கடும் நிபந்தனைகளை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், அவரது ஆசிரியா் சண்முகநாதன் (52) செல்போனில் தகாத வகையில் பேசும் ஒலிப்பதிவு (ஆடியோ) சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திடம் புகாா் அளித்தனா். இதன் தொடா்ச்சியாக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சண்முகநாதனை (செப். 23) கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தனக்கு பிணை வழங்கக் கோரி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் சண்முகநாதன் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா, கடும் நிபந்தனைகளை விதித்து செவ்வாய்க்கிழமை சண்முகநாதனுக்கு பிணை வழங்கினாா்.

ரத்த பந்தம் கொண்ட இருவா் ஜாமீன் பத்திரங்களை சமா்ப்பிக்க வேண்டும். ரூ. 25 லட்சத்தை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி அதன் ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பிணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கும் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளை நீதிபதி ஆா். சத்யா, தனது தீா்ப்பில் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com