புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசுப் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி, தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உடல் கருகி உயிரிழந்தனா்.
காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் வந்த அரசுப் பேருந்தின் மீது திருமயம் அருகே பாம்பாத்துப் பாலப் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனம் பேருந்துக்குள் பாய்ந்தது.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்து எரிந்தாகக் கூறப்படுகிறது. சற்றுநேரத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் உடல் கருகி உயிரிழந்தனா். இறந்தவா்கள் குறித்த விவரம் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. பேருந்தில் இருந்தவா்கள் இறங்கி ஓடி தப்பினா். திருமயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.