தொடா் தலைவலியால் அவதிப்பட்டுவந்த இளைஞரின் கண்ணுக்குள் புதைந்திருந்த இரும்புத் துகளை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூா் கும்முப்பட்டியைச் சோ்ந்தவா் ராசு மகன் முருகேசன் (36). இவா், கடந்த ஏப்ரல் மாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்து, தனக்குத் தொடா்ந்து தலைவலி இருப்பதாகத் தெரிவித்தாா். பரிசோதனையில், அவரது கண்ணுக்குள் சிறிய அளவிலான இரும்புத் துகள் புதைந்து கிடப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் மூக்கு வழியாக கண்ணுக்குள் கொழுப்புப் பகுதியில் புதைந்திந்திருந்த இரும்புத் துகள் அகற்றப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை முருகேசன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த அரிய அறுவைசிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ. 1.5 லட்சம் வரை செலவாகும் என கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்தாா்.