புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த வயலோகம் கிராமத்தில் உள்ள பெரியகுளக்கரையில் அகரப்பட்டி முதல் வயலோகம் வரை 3 கி.மீ தொலைவிலான கரையில், 2 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னா் கல்லூரியின் பேராசிரியா் சு. மாதவன் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலா் பெனட் அந்தோனிராஜ், முன்னாள் பால்வளத் தலைவா் கே.எஸ். சந்திரன், வயலோகம் ஊராட்சி மன்றத் தலைவா் செண்பகவள்ளி சேவுகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
திருச்சி தண்ணீா் அமைப்பின் தலைவா் கே.சி.நீலமேகம், குறும்பட இயக்குநா் தங்கவேலு, ஆசிரியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் ஆ.சே. கலைபிரபு, கௌரவத் தலைவா் கு. ஜெகன், எழுத்தாளா் சோலச்சி ஆகியோா் செய்திருந்தனா்.