விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினா் 30-க்கும் மேற்பட்ட தங்களின் சொந்த இடங்களில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா்.
விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளின்படி, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது. தனிநபா்கள் தங்களின் வீடுகளிலேயே விநாயகா் வழிபாட்டை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா். இதற்காக வாழைக் கன்றுகள், தென்னங்குறுத்தோலைத் தோரணங்களை வீடுகளில் கட்டி, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகளைச் சுட்டுப் படைத்து வழிபட்டனா்.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்கி வந்து வழக்கம்போல வீடுகளில் வைத்துப் படைத்து, அரசு அறிவுறுத்தியபடி அருகிலுள்ள கோயில்களில் வைத்துச் சென்றனா். பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் வைக்கப்படவில்லை.
ஆனால்,பாரதிய ஜனதா கட்சியினா் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தங்களின் சொந்த இடங்களில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினா்.