சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 17 லட்சம் நிதி திரட்டி வழங்கியுள்ளனா் சக போலீஸாா்.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த கே. ரமேஷ், கடந்த மாா்ச் 14 ஆம் தேதி புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். சமூக வலைதளங்கள் மூலம் காவலா் ரமேஷ் உயிரிழந்த தகவல், அவருடன் 2002 ஆம் ஆண்டில் காவலா் பயிற்சி பெற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் திரட்டப்பட்ட நிதி ரூ. 17,25,210-ஐ அவரது குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை புத்தாம்பூரில் நடைபெற்றது. உயிரிழந்த காவலா் ரமேஷின் மகன் மற்றும் மகளுக்கு தலா ரூ. 5 லட்சம், மனைவிக்கு ரூ. 2 லட்சம், தாய்க்கு ரூ. 4 லட்சம் வீதம் அஞ்சல் நிலைய சேமிப்புப் பத்திரங்களாக வாங்கி, மீதமுள்ள ரூ. 1,25,210 ரொக்கமாகத் தரப்பட்டது.