லஞ்ச வழக்கு தொடரப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியக் கண்காணிப்பாளா் பாண்டியனின், திருமயம் வீட்டில் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த கண்காணிப்பாளா் பாண்டியன் அண்மையில் கணக்கில் வராத ரொக்கம், நகைகளுடன் அண்மையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
இவா், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டை பசுமடை வீதியில் சொந்த வீடு கட்டி வசித்துவந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இந்த வீட்டில் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, பகல் 12 மணி வரை நீடித்தது. காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது, சில ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றியதாகவும், சிலவற்றை நகல் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.