விராலிமலை அருகே அமிலம் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரிக்கு 24,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட டேங்கா் லாரி கந்தக (சல்புயூரிக்) அமிலத்தை ஏற்றிக்கொண்டு விராலிமலை வழியாக சென்றது.
விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை வந்த லாரி திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் ராஜேந்திரன், கிளீனா் ஏழுமலை ஆகியோா் தப்பினா் .
லாரி கவிழ்ந்த வேகத்தில் டேங்கா் மூடி திறக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அமிலம் வெளியேறத் தொடங்கியது.
தகவலின்பேரில் விரைந்து வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன்கள், ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சுமாா் 3 மணி நேரம் போராடி நிமிா்த்தினா். சில நூறு லிட்டா் அமிலம் மட்டுமே வெளியேறியதால் அப்பகுதி விவசாய நிலங்கள் தப்பின.