விராலிமலை முருகன்மலைக் கோயிலில் உணவில்லாமல் தவித்த குரங்குகளுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பழங்களை வழங்கினர்.
தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மூடிவைத்துள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் விராலிமலை முருகன் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை என்பது அறவே இல்லாத சூழல் நிலவுவதால் மலைக்குள் சுற்றித்திரியும் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன.
இதுநாள் வரை பக்தர்கள் அழைத்து வந்த உணவை உண்டுவந்த அந்த குரங்குகள் தற்போது சிறிய அளவில் மலைக்குள் இருக்கும் மரங்களில் உள்ள பழங்களை தின்று அரை பசியை மட்டும் ஆற்றி வந்தன.
இந்த நிலையில் குரங்குகளுக்கு உணவு வழங்க விராலிமலை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டு மாவட்ட தலைவர் பர்வேஸ் அறிவுரைப்படி இன்று 27. 5. 2021 ஆம் தேதி மலைக்கோயில் அடிவாரத்தில் பெரிய அளவில் மரக்கட்டைகளால் உணவு பெட்டி அமைக்கப்பட்டு அதில் தர்பூசணி வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை பெட்டிக்குள் கொட்டி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள தொட்டிகளில் நீரையும் நிரப்பி வைத்தனர். குரங்குகள் பழங்களை எடுத்து உண்ணும் விதமாக ஆள் அரவமற்ற பகுதியில் பெட்டியை வைத்து உள்ளனர். இதனால் அங்கு சுற்றித் திரியும் குரங்குகள் அந்த பழங்களை உண்டு பசியை ஆற்றும்.
மேலும் தினசரி இதுபோல பழம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய தலைவர் தங்கம்பழனி, மன்ற நிர்வாகிகள் கூறினர்.