புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது முடக்கக் காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது காணப்படுகிறது. இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
காட்டுப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சும்போது, விஷப்பூச்சிகள் விழுந்து அதனைக் குடிப்போருக்கு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் கண்டுபிடிக்கப்பட்டால், அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா். கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் நிலத்தின் உடைமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.