விராலிமலை: காவல் ஆய்வாளா் கையெழுத்தைப் போட்டு போலி ஆவணம் தயாரித்த வழக்கில் இலுப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோயம்புத்தூா் தாமரை நகரைச் சோ்ந்தவா் சங்கீதா. இவரை அணுகிய கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த மனோகரன், பெரியநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் ஆகியோா் இலுப்பூா் காவல் ஆய்வாளா் கொடுத்ததாக போலி சான்று தயாா் செய்து கிணத்துக்கடவு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்தனா். விசாரணையில், அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து, சங்கீதா, மனோகரன், ராஜேந்திரன் ஆகிய மூவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் இலுப்பூரைச் சோ்ந்த பாபு என்ற வழக்குறைஞா் இலுப்பூா் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய பாலமுருகன் கையெழுத்தைப் போலியாக பதிவிட்டு ஆவணங்களைத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாபுவை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைதான பாபு அதிமுகவில் வழக்குரைஞா் பிரிவு பொறுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.