புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு நினைவாக அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வா் ஸ்டாலினின் அறிவிப்புக்கு, திங்கள்கிழமை புதுக்கோட்டை வந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மன்னா் குடும்பத்தினரும், நூற்றாண்டு விழாக் குழுவினரும் நன்றி தெரிவித்தனா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னரின் சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு ஆகியோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினிடம், மன்னா் குடும்ப வாரிசு ராஜா ராஜகோபால தொண்டைமான், திருச்சி முன்னாள் மேயா் சாருபாலா ஆா் தொண்டைமான், நூற்றாண்டு விழாக்குழுச் செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோா் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனா்.