மத்திய அரசின் திட்டங்களை குறுகிய காலத்தில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் 4 ஆம் இடம் பெற்றதாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி நாடு முழுவதும் தியாகிகள் வாழ்ந்த 75 மாவட்டங்களில் தியாகி சத்தியமூா்த்தி பிறந்த புதுக்கோட்டையும் தோ்வு செய்யப்பட்டிருந்தது.
ஆஜாதி சே அந்தியோதயா தக் என்ற திட்டத்தின் கீழ் இந்த 75 மாவட்டங்களில் 9 மத்திய அமைச்சகங்களின் கீழ் 17 திட்டங்கள், 90 நாட்களில் செயல்படுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. இதற்கு 26 வளா்ச்சிக் குறியீடுகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் தேசிய அளவில் 4ஆவது இடத்தைப் பிடித்தமைக்கான விருதை தில்லியில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற விழாவில் மாவட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் ரேவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி ஆகியோா், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவிடம் விருதைக் காட்டி வாழ்த்து பெற்றனா்.