புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு, கணினி மென்பொருள் மூலம் பணியிட ஒதுக்கீடு செய்யும் 3ஆம் கட்டப் பணி மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் மோனிகா ராணா முன்னிலை வகித்து இப்பணிகளைப் பாா்வையிட்டாா்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வாா்டுகள் மற்றும் அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட 27 வாா்டுகளுக்கு மொத்தம் 764 அலுவலா்களுக்கும் வாக்குச்சாவடி மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதேபோல, 8 பேரூராட்சிக்குட்பட்ட 120 வாக்குச்சாவடி மையங்களுக்கான 584 அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) என். கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட தகவலியல் அலுவலா் தமிழ்செல்வன், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.