முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கவுள்ள அரசு நிகழ்ச்சியில், மொத்தம் ரூ. 614 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்கிவைப்பது, புதிய திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முதல்வா் ஸ்டாலின் வரும் ஜூன் 8 ஆம் தேதி புதன்கிழமை புதுக்கோட்டை வருகிறாா். மாலை 4 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இந்த விழாவில், புதுக்கோட்டையில் இதுவரை நிறைவடைந்த 138 திட்டப்பணிகள் ரூ. 81.13 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்படவுள்ளன. 1394 புதிய திட்டப்பணிகள் ரூ. 164.85 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்படவுள்ளன. மேலும், 47,278 பயனாளிகளுக்கு ரூ. 368.46 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மொத்தம் ரூ. 614 கோடி மதிப்பில் இந்த விழா திட்டமிடப்படுகிறது.
முத்துக்குடா சுற்றுலாத் திட்டம்:
ஆவுடையாா்கோவில் வட்டம், முத்துக்குடா பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகளில் புதிய சுற்றுலாத் திட்டத்துக்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சுற்றுலாத் துறையின் மூலம் ரூ. 3 கோடி மதிப்பிடப்பட்டு, இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டப் பணிகளை முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மகளிா் திட்டத்தின் மூலம் மகளிா் குழுக்கள் உற்பத்திக் குழுக்கள், சமுதாய முதலீட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களுக்கு ரூ. 30.03 கோடி வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நகா்ப்புறத்தில் 550 பயனாளிகளுக்கு ரூ. 23.47 கோடி மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் 10,916 பயனாளிகளுக்கு ரூ. 261.96 கோடி மதிப்பிலும் வீடுகள் வழங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.