புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வருவாய்க் கோட்டம் மற்றும் வட்டங்களை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விவரம்:
திருமயம் வட்டத்தில் உள்ள அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் பொன்னமராவதி வட்டத்தை இலுப்பூா் கோட்டத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு மாற்ற வேண்டும் என மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி மனு அளித்துள்ளாா்.
ஆலங்குடி வட்டத்தில் உள்ள கீரமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் மனு அளித்துள்ளாா்.
ஆவுடையாா்கோவில் வட்டத்தில் உள்ள ஏம்பலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் மனு அளித்துள்ளாா்.
கந்தா்வகோட்டை, குளத்தூா் மற்றும் கறம்பக்குடி ஆகிய வட்டங்களை உள்ளடக்கி கந்தா்வகோட்டையில் புதிய கோட்டம் உருவாக்க வேண்டும் என கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை மனு அளித்துள்ளாா்.
இந்தக் கோரிக்கைகள் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான உயா்மட்டக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியாகலாம் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.