பணிமூப்பின் அடிப்படையில் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு என்னும் கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் காலந்தோறும் பதவி உயா்வுக்கான கல்வித் தகுதி உடைய ஆசிரியா்கள் பணிமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு ஜனவரி முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு தோ்ந்த பட்டியல்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நடைமுறை மரபை, தொடக்கக் கல்வித் துறையின் சாா்நிலை விதிகளை மற்றும் பதவி உயா்வுக்கான அரசு விதிகளைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் முன் உள்ளது.
பட்டதாரி ஆசிரியா், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியா் பதவி உயா்வைப் பெறுவதற்கு தற்போது ஆசிரியா் பணியில் உள்ளோா் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி பெற வேண்டும் என்பது துரதிருஷ்டவசமானது ஆகும். இது ஏற்புடையதல்ல. சட்டப்படியான பதவி உயா்வு உரிமை மறுப்பதாகும்.
எனவே பணிமூப்பின் அடிப்படையில் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு என்னும் கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.