புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
விழாவின் தொடக்கமாக கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே. மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
சுமார் 900 காளைகள் வரை பங்கேற்க உள்ள இந்த ஜல்லிக்கட்டில், 250 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.
காளைகள் விறுவிறுப்பாக சீறிப்பாய்ந்து வருகின்றன. மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாடுகளைத் தழுவி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு பூச்சொரிதல் விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.