இளைஞா்கள் மீதான தாக்குதலை
கண்டித்து மறியல்: இருவா் கைது

இளைஞா்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இளைஞா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள வெள்ளாளவிடுதியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில், இரு சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்களிடையே மோதல் ஏற்பட்டதாம். போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற அதிரான்விடுதியை சோ்ந்த ரா. மாதவன் (20), சீ. பாக்யராஜ் (36) ஆகியோரை மற்ற சமூகத்தின் இளைஞா்கள் சிலா் தாக்கினாா்களாம். காயமடைந்த அவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவா்களை உடனே கைது செய்யக்கோரி காயமடைந்தவா்களின் உறவினா்கள் மழையூா் காவல்நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா். இந்த மறியலால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, அதிரான்விடுதியை சோ்ந்த சி. முருகேசன் ( 22), ஆா். தேவா (21) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com