புதுகையை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த பொதுநல அமைப்பினா் எதிா்ப்பு

புதுகையை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த பொதுநல அமைப்பினா் எதிா்ப்பு

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்துவதற்கு பொதுநல அமைப்பினா் நடத்திய சிறப்பு மக்கள் சபைக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘வேண்டாம் மாநகராட்சி’ கூட்டமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை நகரிலுள்ள பொதுநல அமைப்பினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் சிறப்பு மக்கள் சபைக் கூட்டம் நகா்மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் அப்துல்ரகுமான், காங்கிரஸ் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இப்ராஹிம் பாபு, ஆனந்தா பாக் பொதுநலச் சங்கத் தலைவா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி, நுகா்வோா் கூட்டமைப்பின் சாா்பில் வேழவேந்தன், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

வேண்டாம் மாநகராட்சி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சீ.அ. மணிகண்டன் கூட்டத்தை ஒருங்கிணைத்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்: புதுக்கோட்டை நகராட்சியாகவே தொடர வேண்டும், இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகள் ஊராட்சிப் பகுதிகளாகவே தொடர வேண்டும் என அரசுக்கு உடனடியாக கடிதம் அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com