கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

ஆலங்குடி, ஏப்.25: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கட்டுமானத் தொழிலாளியை புதன்கிழமை இரவு அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நெல்லிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் எட்வின் துரை(42). அதே ஊரைச் சோ்ந்தவா்கள் குமாரசாமி(47), அனிஸ்குமாா்(28). இவா்கள் மூவரும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கட்டடங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வேலை முடிந்து, மூவரும் புதன்கிழமை இரவு மது அருந்தினராம். அப்போது, எட்வின் துரைக்கும், அனிஸ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் தாக்கிக் கொண்டதில், எட்வின்துரை பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மழையூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, அனிஸ்குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com