தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு, அன்னிய மொழியைக் கற்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
பட்டுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற பாரதி விழாவில் மேலும் அவர் பேசியது:
உலகச் செம்மொழிகளில் பழமை வாய்ந்த தமிழ் மொழியும் ஒன்று. ஆனால் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அன்னிய மொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். மொழி வழிக்கல்வி பிரச்னையில் சிக்கித் தவிக்கிறோம். தாய்மொழியை புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தில் கல்வி கற்பதை காணும் போது என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்றார் அவர்.
விழாவுக்கு பட்டுக்கோட்டை பாரதி இயக்கத் தலைவர் புலவர் அ.த. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
கௌரவத் தலைவர் மருத்துவர் மு. செல்லப்பன், தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் ஞானதிரவியம், கவிஞர்கள் வல்லம் தாஜூபால், சௌ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் இலக்கிய மன்ற நிர்வாகி நா. ராஜமோகன் வரவேற்றார். பட்டுக்கோட்டை பாரதி இயக்கச் செயலர் சிவ. தங்கையன் நன்றி கூறினார்.