கும்பகோணம் பகுதியில் உள்ள 2 கோயில்களில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலில் 23-10-1969 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 46 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 18-ம் தேதி விநாயகர் பிரார்த்தனையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
19-ம் தேதி முதல்கால யாகபூஜையும், 20-ம் தேதி காலை, மாலையில் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகளும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜை நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கும்பாபிஷேகமும், மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் மகாஅபிஷேகம் நடைபெற்றது.
சீராட்டும் விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்: இதேபோல், கும்பகோணம் பேட்டை பஞ்சுக்காரத் தெருவில் உள்ள சீராட்டும் விநாயகர் கோயிலில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கி, முதல் கால யாகபூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரண்டாம் காலயாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து யாகசாலை பந்தலிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.
எலந்தரப்பார் ஐயனார் சுவாமி, வீரனார் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்:
இதேபோல், கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரி கிராமத்தில் உள்ள எலந்தரப்பார் ஐயனார் சுவாமி, வீரனார் சுவாமி கோயில் திருப்பணி செய்யப்பட்டு,
மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இரண்டு காலம் யாகபூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (ஆக.21) முதல் மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெறுகின்றன.