கும்பகோணத்தில் நவகன்னிகைகள் வழிபட்ட அரசமர விநாயகர், எலந்தமர விநாயகர் கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கீழவீதியில் அரசமரத்தின் கீழ் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகரை கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னிகைகள் வழிபட்டு அருள்பெற்ற தலமாகும்.
சிறப்பு மிக்க இந்த அரசமர விநாயகர் மற்றும் சுவாமிநாதசுவாமி, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான், துர்காம்பிகை, ஐயப்பசுவாமி முதலான சுவாமிகளுக்கும், இதன் இணை கோயிலான எலந்தமர விநாயகர் கோயிலுக்கும் திருப்பணிகள் நிறைவுபெற்று
குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 11-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்கியது.
13-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மாலை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு அரசமர விநாயகர் வீதியுலா நடைபெற்றது.