பட்டுக்கோட்டையை அடுத்த பாலத்தளி துர்க்கை அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மதியம் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
துவரங்குறிச்சியில்... இதேபோல, பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி தென்பாதி காமாட்சி அம்மன் கோயிலில் 16-ம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலையில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.