தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். சார்பு நிலையைக் கடைப்பிடிப்பதாக கூறி தஞ்சாவூர் ரயிலடியில் வியாழக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த 53 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மக்கள் கலை இலக்கியக் கழக தஞ்சாவூர் கிளைச் செயலர் ராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், பங்கேற்ற மாநில இணைச் செயலர் காளியப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் காலூன்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. இதற்காக தஞ்சாவூர் அருகே 20 நாட்கள் முகாம் நடத்தி பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சிக்கு 300-க்கும் அதிகமான காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளித்துள்ளது.
தந்தை பெரியார் கட்டி வளர்த்த பகுத்தறிவு சுயமரியாதை உணர்வுகளைக் குழிதோண்டி புதைக்கும் வேலையைத் தமிழக அரசு செய்து வருகிறது. ஆட்சியையும், பதவியையும் காத்துக் கொள்வதற்காகத் தமிழக அரசு இச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார் காளியப்பன். இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 53 பேரை போலீஸார் கைது செய்தனர்.