தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்கானூர்பட்டியில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி ஆட்சியரகத்தில் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருக்கானூர்பட்டி ஊராட்சியில் வல்லம் - ஒரத்தநாடு சாலையில் அரசு மதுக்கடை உள்ளது. இக்கடைக்கு மது அருந்த வருபவர்களால் திருக்கானூர்பட்டி கிராம மக்கள் பெரும் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.
மது அருந்துவோர் மது பாட்டில்களை சாலையிலும், அருகில் உள்ள விவசாய நிலத்திலும் உடைத்துப் போட்டுவிட்டுச் செல்வதால் நடந்து செல்வோர், வாகன ஓட்டுநர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும், பாட்டில் கண்ணாடி காலில் குத்திவிடுவதால் காயங்கள் ஏற்படுகின்றன.
சுற்றுவட்டாரத்தில் வேறு எங்கும் மதுக்கடைகள் இல்லாததால் அடையாளம் தெரியாத பலரும் இக்கடைக்கு வருவது மட்டுமல்லாமல் ஊருக்குள்ளும் வலம் வருகின்றனர். இதுபோன்ற நபர்களால் பல்வேறு அச்சங்கள் உள்ளன.
இந்தக் கடையில் வியாழக்கிழமை மது அருந்திய நபர் இறந்துவிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடருவதைத் தவிர்க்க திருக்கானூர்பட்டியிலிருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும்.