தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுத்து, தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் குளங்களில் நிரப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரை அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து, ஏரிப்புறக்கரை ஊராட்சியிலுள்ள பெரிய மற்றும் சின்ன ஏரிகளில் நீர் நிரம்பி முழு கொள்ளவை எட்டியது.
இதையடுத்து, ஏரியிலிருந்து அதிகளவில் வெளியேறும் உபரி நீர் கடந்த 4 நாள்களாக ஈசிஆர் சாலையையொட்டி அமைந்துள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வாய்க்கால் வழியாக வெளியேறி அதிரை கடலில் கலந்து வீணாகிறது.
கடலில் கலந்து வீணாகும் இந்த உபரி நீரை, ஏரி மற்றும் வாய்க்காலையொட்டி நீரின்றி வறண்டு கிடக்கும் ஏரிப்புறக்கரை பள்ளக்குளம், அதிரை கடற்கரைச் தெருவிலுள்ள வெட்டிக்குளம் ஆகிய குளங்களில் நிரப்பினால் பொதுமக்கள் பயன்பெறுவர் என சமூக ஆர்வலர் அதிரை அமீன் கூறினார்.