கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி பாதுகாப்பு கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட சுதா என்ற பெண் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர்களும், ஊழியர்களும் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், கும்பகோணம் சார் ஆட்சியரின் தன்னிச்சையான செயல்பாடுகளை கண்டித்தும், மருத்துவமனை பணியாளர்களுக்கு போதிய பணி பாதுகாப்பு வழங்கக் கோரியும் திங்கள்கிழமை காலை ஒரு மணி நேரம் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு மருத்துவ மேற்படிப்பு மாணவர் சங்க மாநில செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மருத்துவர்களும், செவிலியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு, தமிழக அரசு பாதுகாப்பளிக்க தவறி விட்டதாகவும், தங்களது பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே தங்களால் சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்றும் தெரிவித்தனர்.
ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.