பாபநாசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும், பாபநாசம் பகுதியிலுள்ள ஆறுகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் மேலவீதி கடைவீதிஅண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் மாலாபுரம் கண்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில செயலாளர் வழக்குரைஞர் ஏ.எம்.ராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.