தஞ்சாவூரில் குழந்தைகள் தின விழாவையொட்டி மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் திவாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடங்கி வைத்தார். அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி சாலை, மணிமண்டபம், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக மீண்டும் விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.
இதில், காது கேளாத, வாய் பேச இயலாத சுமார் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர், மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.எஸ். ரமேஷ் பாபு, ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) என். மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.