பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் விடுதியும் உள்ளது. இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். பள்ளியின் எல்லையையொட்டி, தென்னந்தோப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அப்பகுதியிலிருந்து ஆடு, மாடு, கோழிகள் திடீரென வகுப்பறைக்குள் புகுந்துவிடுவதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.
மேலும், அடிக்கடி பாம்பு புகுந்து விடுவதால் மாணவர்கள் அச்சத்துடனேயே நடமாடுகின்றனர். பள்ளியின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகள் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்துகிடப்பதால், அருகேயுள்ள தென்னந்தோப்பு நிழலில் மதுகுடிப்போர் பாட்டில்களை உடைத்து பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.
எனவே, மாணவ, மாணவிகளின் நலன்கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.