தஞ்சாவூரில் சனிக்கிழமை நள்ளிரவு முத்துப்பல்லக்கு விழா நடைபெற்றது.
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் முத்துப் பல்லக்கு விழா நடைபெறும். இதன்படி சனிக்கிழமை நள்ளிரவு தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளை விநாயகர் கோயிலில் 91 ஆம் ஆண்டு புஷ்ப விமான பல்லக்கும், மகர்நோம்புச்சாவடி ஜோதி விநாயகர் கோயிலில் 50 ஆம் ஆண்டு முத்துப்பல்லக்கும், மாமாசாகீப் மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் 73 ஆம் ஆண்டு முத்துப்பல்லக்கும், கீழவாசல் உஜ்ஜினி மாகாளி அம்மன் கோயிலில் கல்யாண கணபதி எழுந்தருளிய பல்லக்கும், தெற்கு வீதி கமலரத்ன வியாகர் கோயிலில் கமலரத்ன விநாயகர் எழுந்தருளிய முத்துப்பல்லக்கும் புறப்பட்டன.
மகர்நோம்புசாவடி சின்ன அரிசிக்காரத் தெரு பாலதண்டாயுதபாணி கோயியிலிருந்து 107 ஆம் ஆண்டு முத்துப்பல்லக்கும், கீழவாசல் குறிச்சிதெரு சுப்பிரமணியர் கோயிலிலிருந்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துப்பல்லக்கும் புறப்பட்டது.
மின்னொளி அலங்காரம் செய்யப்பட்ட இப்பல்லக்குகள் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழவீதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வீதியுலா வந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.