கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கும்பகோணத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் முகமது செல்லப்பா தலைமை வகித்தார். இதில் திருச்சி மண்டல செயலாளர் உதுமான்அலி, மாணவர் இயக்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் முகமதுஷெரீப் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராகவும், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், பாலியல் பலாத்கார வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்திபூங்கா அருகே திங்கள்கிழமை மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறுமியின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகரத் தலைவர் சுமதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.