பேராவூரணி குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் கலாசார நடன விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் விழாவை தொடக்கி வைத்து பேசியது: மாணவர்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு, மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வழிநடத்தப்படும் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் பல்வேறு திறன்கள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ள முடியும். அதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் மாணவர்களை கூர்மைப்படுத்தும்.
எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பன்முகத்தன்மைக் கொண்டவர்களாக வளர்ப்பதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியம் என்றார்.
விழாவில், மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தனியார் பள்ளிகள் மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரசேகரன், அறந்தாங்கி ஐடியல் பள்ளி தாளாளர் சேக்சுல்தான், பள்ளியின் அறங்காவலர்கள் மா.ராமு, எம்.கணபதி, ச.ஆனந்தன், எம்.என்.பிரியதர்ஷினி, அஸ்வின்ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதுரை வீரபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.